தமிழினம் ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு கடமைப்பட்டதாக இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமையை எமது இனத்தின் துக்ககரமான நாளாகப் பிரகடணப்படுத்தி முடிந்தளவு எமது வீடுகளிலும், வியாபாரா நிலையங்களிலும் வெள்ளைக் கொடிகளையோ கறுப்புக் கொடிகளையோ பறக்க விட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தலகள் மிக விரைவில் நடத்தப்பட்டு அந்த அந்த மாகாண மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய ஒரு சூழலை இந்த அரசு ஏற்பத்திக் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்புகொண்டு உங்களை இந்த கூட்டத்திற்கு அழைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள்,அதனால் அந்த கூட்டத்திற்கு சமுகமளிக்கவேண்டாம் என்று கூறினார்.பின்னர் நேற்று வியாழக்கிழமை காலையில் தொலைபேசியில் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவந்துள்ளதாக தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல்ராஜபக்ஸ இதனை கூறினாரா அல்லது இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்ந்து செயற்படும் இராஜாங்க அமைச்சர் இருக்கின்றார்,மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் இருக்கின்றார்.யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக கூறவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்காக குரலாக ஓங்கிஒலித்த முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலி.தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளை தட்டிக்கேட்டதுமட்டுமன்றி 2009ஆம் ஆண்டு மேமாதம் நடுப்பகுதியில் நடைபெற்ற இறுதி யுத்ததில் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்படும்போது முள்ளிவாய்;க்காலில் இலட்சக்கணக்கான உறவுகள் கொல்லப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்று ஒரு சாட்சியாளராக இருந்திருக்கின்றார்.
அந்தவகையில் தமிழனம் அவருக்கு கடமைப்பட்டதாகயிருக்கின்றது. தமிழினம் அவருக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றது.
அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் திங்கட்கிழமையை அரசு துக்கதினமாக அனுஸ்டிக்க வேண்டும் என்ற எமது கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வேண்டுகொள் விடுத்திருக்கின்றார். அரசு அதற்குச் செவிசாய்க்கின்றதோ இல்லையோ நாங்கள் தமிழ் பேசும் இனம் எதிர்வரும் திங்கட்கிழமையை எமது இனத்தின் துக்ககரமான நாளாகப் பிரகடணப்படுத்தி முடிந்தளவு எமது வீடுகளிலும், வியாபாரா நிலையங்களிலும் வெள்ளைக் கொடிகளையோ கறுப்புக் கொடிகளையோ பறக்க விட வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமயில் பொதுஜனப் பெரமுன கடசியினர் இந்த நாட்டின் ஆட்சியை நடத்திக் கொண்டு வருகின்றார்கள். 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த மகாணசபை முறைமை முற்றாக நிராகரிக்கப்பட்டு ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகளின் ஆளுமையின் கீழ் ஆட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருகின்றது. கடந்த ஜெனீவா கூட்டத் தொடரின் போது கூட மாகாணசபைத் தேர்தல்கள் முறையாக நடாத்தப்பட்டு முழு அதிகாரங்களும் பரவலாக்கப்பட்டு அந்த அந்த மாகாண மக்களின் ககைளிலே அந்த அந்த அரசுகள் கையளிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் மேலோங்கியிருக்கின்றன அடிப்படையில் மாகாணசபைத் தேர்தல்கள் மிக விரைவாக நடைபெற வெண்டும்.
அந்த மாகாணசபைத் தேர்தல் எந்த முறையில் நடைபெற வேண்டும் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. தேர்தல்கள் ஆணையகம் பழைய முறைப்படி இந்த மாகாணசபைத் தேர்தல் நடாத்தி புதிய அரசியலமைப்பினூடாகப் புதிய தேர்தல் முறையைக் கொண்டு வரலாம் என்று ஆலோசனை கூறியிருக்கின்றார்கள்.
ஜெனீவா கூட்டத்தொடரின் போது ஜுலை மாதமளவில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் என்று கூறியிருந்தாலும். இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே மாகாணசபைத் தேர்தலைக் கலப்பு முறையில் எழுபதுக்கு எழுபது என்ற அடிப்படையில் நடத்துவதற்கு விரும்புகின்றார்கள் என்ற கருத்து தெரிவிக்கப்படதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
அவ்வாறு எழுபதுக்கு எழுபது என்ற கலப்பு முறையிலே அந்தத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமாக இருந்தால் அந்தச் சட்டம் மீண்டும் பாராளுமனறத்திற்கு வந்து பலதரப்பட்டவர்களாலும் விவாதிக்கப்படும் போது இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல் நடைபெறவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை இதைத்தான் இந்த அரசாங்கமும் விரும்புகின்றதோ தெரியவல்லை.
ஏனெனில் இந்தக் கொடூரமான ஆட்சி, ஒட்டுமொத்த சிங்கள மக்களினாலும் கொண்டு வரப்பட்ட ஆட்சி இன்று சிங்கள மக்கள் மத்தியிலும் பலவீனமடைந்து கொண்டு வருகின்றது. எனவே இந்தத் தேர்தலைப் பிற்போடுவதற்கான அறிகுறியாகக் கூட இது இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மாகாணசபைத் தேர்தல்கள் மிக விரைவில் நடத்தப்பட்டு அந்த அந்த மாகாண மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய ஒரு சூழலை இந்த அரசு ஏற்பத்திக் கொடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கலந்துகொண்ட கூட்டத்திற்கு எங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கடந்த 23ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபரினால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இந்த கூட்டத்தில் பங்குபற்றி ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு கூறியிருந்தார்கள்.ஆனால் நேற்று முன்தினம் புதன்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்புகொண்டு உங்களை இந்த கூட்டத்திற்கு அழைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள்,அதனால் அந்த கூட்டத்திற்கு சமூகமளிக்கவேண்டாம் என்று கூறினார்.பின்னர் நேற்று வியாழக்கிழமை காலையில் தொலைபேசியில் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவந்துள்ளதாக தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல்ராஜபக்ஸ இதனை கூறினாரா அல்லது இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்ந்து செயற்படும் இராஜாங்க அமைச்சர் இருக்கின்றார்,மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் இருக்கின்றார்.யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக கூறவேண்டும். அரசாங்க அதிபரினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு மேலாக தொலைபேசியூடாக எங்களை வரவேண்டாம் என்று சொல்லுமளவிற்கு அரசாங்க அதிபரிற்கு அழுத்தம் கொடுத்த போலி முகங்களை அரசாங்க அதிபர் வெளிப்படையாக கூறுவாரா என்பதை கேட்க விரும்புகின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அமைச்சர்களிற்கு பக்கத்தில் சென்று உட்கார்ந்திருக்க வேண்டும், அவர்கள் கூட்டத்திலே பரிமாறும் சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும், அதன் மூலம் வெளிவருகின்ற புகைப்படங்கள்,பிரசாரங்கள் மூலமாக எங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று அந்தக் கூட்டங்களில் பங்குபெறுவதில்லை.
அமைச்சர் என்பவர் குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது குறிப்பிட்ட இனத்திற்கோ சொந்தமானவரல்ல. முழு நாட்டிற்கும் உரித்தானவர். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பிலே அதிகூடிய பெரும்பான்மையை பெற்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கின்றோம். நாங்கள் இப்படியான கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைத்து அதற்கான தீர்வுகளை காண்பதற்காகவே இப்படியான கூட்டங்களுக்கு செல்கின்றோம். கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைக்கின்றபோது ஆமாம் சாமி போட்டுக்கொண்டு அரசாங்கத்திற்கு கூஜா தூக்குகின்றவர்களைப்போல நாங்கள் அங்கு இருப்பதில்லை. மக்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைக்கின்றபோது அவ்விடயம் பத்திரிகைகளில் வரும்போது தங்களுக்கு அவமானமாக இருக்கும் என நினைத்துத்தான் அரசாங்க அதிபருக்கு இப்படியான அழுத்தங்களை கொடுக்கின்றார்களா என்பது தெரியவில்லை.
அரசாங்க அதிபர் இப்படியான அரசியல்வாதிகளுக்கு கைப்பொம்மையாக இருக்காமல் மாவட்ட அபிவிருத்தியை கருத்தில்கொண்டு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அபிவிருத்தி சார்ந்த கூட்டங்களுக்கு அழைத்தால்தான் எமது மாவட்டத்தையும் மக்களையும் முன்னேற்றக்கூடியதாக இருக்கும்.
இப்படியான அரசியல்வாதிகள் ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையிலே இவர்கள் அத்தனைபேரின் முகங்களும் வெளிப்படையாகத் தெரிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் கதைப்பதை கேட்டுக்கொண்டு இருப்பதற்காக இப்படியான கூட்டங்களுக்கு செல்வதில்லை என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டு அரசாங்க அதிபர் இப்படியான போலி அழுத்தங்களுக்கு அடிபணியாமல்; அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும். இம்மாவட்ட மக்களினால் அதிகூடிய விருப்பு வாக்கை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உரிமை மறுக்கப்படும்போது எங்களுக்கு வாக்களித்த அத்தனை வாக்காளர்களையும் நீங்கள் ஒதுக்குவதாகவே நாங்கள் கூறுவோம்.
எதிர்வரும் காலங்களில் மாவட்ட அரசாங்க அதிபர் இப்படியான போலி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் மாவட்ட மக்களையும் மாவட்டத்தின் முன்னேற்றத்தையும் கருதி செயற்பட வேண்டும்.