ஆறாவது நாளாகவும் தொடரும் போராட்டம் -காணாமல்போனவர்களின் உறவினர்கள் இணைவு


சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 06ம் நாளான இன்று சர்வதேச மகளிர் தினமாகையினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்றுவரும் சர்வதேச நீதிகோரிய போராட்;டம் நடைபெறும் இடத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவு தொடர்பில் தெரியப்படுத்தி நீதிமன்ற தடையுத்தரவினை வழங்க முற்படுகையில் பெயர்குறிப்பிட்ட நபர்கள் அவ்விடம் இல்லாமையால் பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.

பொலிஸார் வருகைதந்து தடையுத்தரவினை வழங்க முற்பட்டபோது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டதை காணமுடிந்தது.

சர்வதேச மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி பெண்கள் எத்தனையோ பேர் கண்ணீருடன் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் ண்டனில் கவனீர்ப்பில் ஈடுபட்டு வரும் அம்பிகை அம்மணியின் கோரிக்கைகளுக்கும் நாட்டு அரசாங்கம் உரிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் சர்வதேச மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.