இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா பூங்காவில் உள்ள அன்னாரது சிலையருகில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவருமான பொன்.செல்வராஜா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,தவிசாளர்கள்,கட்சி மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தந்தை செல்வா ஜனனதின சிறப்புரை கட்சி தலைவரினால் நிகழ்த்தப்பட்டது.