மீண்டும் அமுலுக்கு வந்த ஊரடங்கு –மீண்டும் வியாழன் தளர்வு

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டின் 19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று பிற்பகல் 2.00மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரையில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமே மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 9 வியாழக்கிழமை மீண்டும் தளர்த்தப்பட்டு மீண்டும் அதே நாளில் மாலை 4 மணிக்கு  அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் வெறிச்சோடி காணப்படுகின்றது.

எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.