புளியந்தீவு தெற்கு வட்டாரத்தில் மாநகரசபை நிதியில் கிராம சேவை உத்தியோகத்தரூடாக அரசி மூடைகள் வழங்கிவைப்பு…


கொரோணா நிலைமை தொடர்பில் நாடளாவிய ரீதியில் முடக்கம் ஏற்பட்டுள்ளமையைக் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் அன்றாடம் தொழில் புரிந்து வருமானம் ஈட்டும் குடும்பங்களின் நிலைமையினை அறிந்து இவ் இடர்காலப்பகுதியில் அவர்களின் அன்றாட வாழ்வினை சிரமமின்றி நடாத்துவதற்கான சிறு உதவியாக அரிசி மூடைகள் வழங்கும் செயற்திட்டம் மாநகரசபை நிதியினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாநகரசபை உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் மாநகரசபைப் பாதீட்டில் 30 மில்லியன்கள் ஒதுக்கீடு செய்து வட்டாரத்திற்கு 150 மூடைகள் வீதம் அந்த அந்த கிராமசேவகர்களினூடாக அவர்களினால் தெரிவு செய்யபப்பட்ட மக்களுக்கு இவை வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் இன்றைய தினம் புளியந்தீவு தெற்கு வட்டாரத்திற்கான உதவிகள் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தலைமையில் புளியந்தீவு தெற்கு கிராமசேவை உத்தியோகத்தரிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான இராஜேந்திரம், ருபாகரன், மதன், ரூபராஜ், அசோக், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் உட்படப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.