கொத்தியாபுலையில் வீதிக்கு இறங்கி போராடிய மாணவர்கள்,பெற்றோர்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வவுணதீவு,கொத்தியாப்புலை கலைவாணி வித்தியாலய முன்பாக இன்று(12) காலை பாடசாலையின் முன்
ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையில் ஊழலில் ஈடுபடும் பாடசாலையின் அதிபரையும் ஆசிரியரையும் நீக்குமாறு கோரியும் பாடசாலையில் இயங்கிவரும் உயர்தர பிரிவினை நீக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையினை நிறுத்துமாறு வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறித்த பாடசாலையின் அதிபரும் ஆசிரியர் ஒருவரும் நீண்டகாலமாக ஊழலில் ஈடுபட்டுவருவதாகவும் பாடசாலையின் கணக்கறிக்கைகள் எதுவும் காட்டப்படுவதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் 25மாணவர்களுடன் பாடசாலையில் உயர்தர பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றினை நீக்கிவிட்டு குறைந்த மாணவர்கள் உயர்தரம் கற்கும் பகுதிக்கு குறித்த உயர்தர பிரிவினை கொண்டுசெல்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவற்றினை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலையின் மாணவர்கள்,பெற்றோர்கள் , பழைய மாணவர்கள்,கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்;ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் வருகை தந்திருந்ததுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.

அரசியலை கல்விக்குள் புகுத்த வேண்டாம், இது ஒரு அரசியல் பழிவாங்கல் கொத்தியார்லை மக்கள் இதில் விழிப்படையவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இப் பாடசாலையின் உயர்தரத்தில் மாற்றம் செய்ய முனைந்தால் ஜனாதிபதி,பிரதமர், ஆளுனர் அலுவலகம் முன் அமரத்தயாராக உள்ளோம், தங்களது வங்குரோத்து அரசியலை செய்ய அதிகாரிகளை இடமாற்றம் செய்வது அதிகாரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவது என தேவையற்ற விடயங்களை சிலர் மேற்கொண்டுவருவதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் இதன்போது கைவிடப்பட்டது.