பிள்ளையானின் பிறந்த தினத்தில் மட்டக்களப்பு நகரில் அலையென திரண்ட மக்கள்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விடுதலையினை வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் பேரணியொன்று இன்று காலை  முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சந்திரகாந்தனின் 44வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இந்த பேரணி நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தனின் தலைமையில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இருந்து இந்த பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.பேரணிக்கு முன்பாக சந்திரகாந்தனின் விடுதலையினை வலியுறுத்தும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கின் அடிமை விலங்கினை உடைக்க சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு என்னும் தலைப்பில் இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் விடுதலையினை வலிறுத்தும் வகையிலான பல்வேறு பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் சந்திரகாந்தனின் படத்தினையும் ஏந்தியிருந்தனர்.

பேரணியான காந்திபூங்காவில் இருந்து ஆரம்பமாகி பிரதான பஸ் நிலையம் ஊடாக சென்று மட்டக்களப்பு வாவிக்கரை வீதியூடாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் வரையில் சென்றது.

அதனைத்தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் விசேட நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்தலைவர் கே.திரவியம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே,விமலவீர திசாநாயக்க,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் பிரதேச மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி தலைவர் சந்திரகாந்தன் விடுதலைசெய்யப்படவேண்டும் என்ற பிரகடனம் வாசிக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.