புதூரில் போக்குவரத்து பொலிஸாரிடம் பறித்து செல்லப்பட்ட கைத்துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு புதூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸார் ஒருவரிடம் இருந்து பறித்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட துப்பாக்கி இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மாலை புதூர் மூன்றாம் குறுக்கு வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கைத்தூப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை புதூர் பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இருவருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இரண்டு போக்குவரத்து பொலிஸாரும் தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர்.

அத்துடன் இதன்போது போக்குவரத்து பொலிஸார் ஒருவரின் கைத்துப்பாக்கியும் பறித்துச்செல்லப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை அது கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.