புதூர் பகுதியில் பதற்றம் -பொலிஸார் மீது தாக்குதல் -மூவர் கைது

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட புதூர் பகுதியில் இரண்டு பொலிஸார் தாக்கப்பட்டு ஒருவரின் ஆயுதம் பறித்துச்செல்லப்பட்டது தொடர்பில் மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் இன்று முற்பகல் இரண்டு போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஒருவரின் கைத்துப்பாக்கியும் பறித்துச்செல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றுவரும் நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.

இளைஞர் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தமுற்பட்டபோது அவர்கள் நிறுத்தாமல்சென்ற நிலையில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் அவர்களை துரத்திச்சென்று பிடிக்கமுற்பட்டபோது குறித்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகிய நிலையில் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்களுக்கும் குறித்த போக்குவரத்து பொலிஸாருக்கும் இடையில் வாய்;த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு நின்ற சிலரால் குறித்த போக்குவரத்து பொலிஸார் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது போக்குவரத்து பொலிஸார் ஒருவரின் கைத்துப்பாக்கி பறித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த பகுதியில் படையினர்,விசேட அதிரடிப்படையினர்,பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேநேரம் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.