அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்டவர்கள் சவுக்கடியில் சிக்கிய பரிதாபம்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பகுதிக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லவிருந்தவர்கள் பொலிஸாரினால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை சவுக்கடி பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தினை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கலாவத்தை பகுதியை சேர்ந்த இரண்டு பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர்களும் வந்தாறுமூலையை சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சவுக்கடி பகுதியில் இருந்து படகு மூலம் வேறு ஒரு படகுக்கு ஆக்களை அனுப்பிக்கொண்டிருக்கும்போது குறித்த செயற்பாடுகள் மீனவர்களினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த மூவரும் பயணப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை ஏற்றிவந்ததாக கருதப்படும் முச்சக்கர வண்டியொன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இப்பகுதியில் இருந்து 15க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு சட்ட விரோதமான முறையில் அவுஸ்ரேலியா செல்வதற்கு முற்பட்டுள்ளதாகவும் தப்பிச்சென்றுள்ள ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்புடுவதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.