சீயோன் தேவாலயம் மீண்டும் நிர்வாகத்திடம் -சீரமைக்கும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் தேவாலயத்தின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின வழிபாடுகளின்போத சீயோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத்தாக்குதல் காரணமாக அங்கு 29பேர் உயிரிழந்திருந்ததுடன் 74பேர் படுகாயமடைந்திருந்தனர்.

குறித்த தாக்குதல் காரணமாக தேவாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் ஏனைய பகுதிகளில் தற்கொலை தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் புனரமைக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மட்டும் வழங்கப்படாத நிலையிலேயே இருந்துவந்தது.

குறித்த தேவாலயம் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து நேற்று தேவாலயம் தேவாலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று தேவாலயத்தினை தூய்மைப்படுத்தும் பணிகளை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் மேற்கொண்டுவருகின்றனர்.

இதன்போது சீயோன் தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக இந்தியாவில் இருந்தும் போதகர்கள் குழுவினர் வருகைதந்து தேவாலயத்தினை பார்வையிட்டதுடன் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை இந்த தேவாலய புனரமைப்பு பணிக்கு அரசாங்கத்தினால் இதுவரையில் எந்தவித உதவியும் வழங்கப்படவில்லையென்று இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.