ரிழ்வானின் மாமனார் மற்றும் மாமியார் உட்பட ஆறு பேருக்கு விளக்கமறியல்

தற்கொலை குண்டுதாரியான தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் சகோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து கைதுசெய்யப்பட் அவரின் மாமனார் மற்றும் மாமியார் உட்பட காத்தான்குடியில் நேற்று கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 நேற்று காத்தான்குடியில் தற்கொலை அங்கி, அலைபேசிகள்-4, ஏ.ரி.எம்.அட்டைகள், வங்கி புத்தகம், மரணமடைந்த ரிழ்வான் தம்பதிகளின் நான்கு குழந்தைகளின் 4 புகைப்படங்கள், ரிழ்வானின் தேசிய அடயாள அட்டை உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.

விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்தே இந்த தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அவ்வீட்டிலிருந்த ரிழ்வானின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்புகளை பேணியதாக கைதுசெய்யப்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமாய்த்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிகத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த நான்கு பேரும் இதன்போது ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ரிஸ்வான் முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.