தொழிலுரிமை போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் -சிவகாந்தன் கோரிக்கை

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுரிமை போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையிலான மகஜர் ஒன்று இன்று மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபாலசேனவிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஊடகளுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.உள்வாரி,வெளிவாரியென்று இல்லாமல் பட்டப்படிப்பினை நிறைவுசெய்த அனைவருக்கும் நியமனங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய தினம் மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதியிடம் எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வழங்கியிருந்தோம்.1800க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எந்தவித நியமனங்களும் வழங்கப்படாமல் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவருகின்றனர்.

நல்லாட்சியின் ஜனாதிபதியானது அவரை கடந்த வருடத்தில் இருந்து நான்கு தடவைகள் சந்தித்து மகஜர்களை கையளித்தபோது வேலையற்ற பட்டதாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.அந்த வாக்குறுதிகள் வழங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் எந்த நியமனங்களும் வழங்கப்படவில்லை.

மீண்டும் ஜனாதிபதி அவர்கள் எங்களுக்கு வழங்கி போலியாகி வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும்.வடகிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அதிகளவான வயது கூடிய பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் காணப்படுகின்றனர்.அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவேண்டும்.

உள்வாரி,வெளிவாரியென்ற பிரிப்பினைகள் களையப்பட்டு பட்டத்தினை பூர்த்திசெய்த அடிப்படையில் நியமனங்களை வழங்கி பட்டதாரிகளுக்கான தொழிலுரிமை போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.