காணியை பார்க்க சென்றவரை கடத்திச்சென்று கொலைசெய்த கும்பல் -வெல்லாவெளியில் பரபரப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராணமடு பகுதியில் காணாமல்போனவர் நேற்று அடிகாயங்களுடன் சடலமாக மீட்டக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மத்தியமுகாம் பகுதியில் இருந்து தனது வயலை பார்வையிடவந்த கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு(65வயது)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இராணமடு ஆற்று பகுதியில் குறித்த நபரின் மோட்டார் சைக்கிள்,தலைக்கவசம் என்பன கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை தொடர்ந்து இது குறித்து வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பில் தொடர் விசாரணைகளும் தேடுதல்களும் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களிம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்துள்ளது.

இந்த நிலையில் காணாமல்போன நபர் கைகள் பின்புறமாக கட்டக்கப்பட்ட நிலையில் கொலைசெய்யப்பட்ட வயல்வெளியொன்றில் உள்ள வாய்க்கால் பகுதியில் நாணல்புற்களுக்குள் புகுத்திவைக்கப்பட்டிருந்தது சந்தேக நபர்களால் காட்டப்பட்டதை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் ராணமடு மாதிரி கிராமத்தினை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் தொடர்பில் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பொறுப்பதிகாரி கே.ரவீந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஸ்தலத்திற்கு சென்று தடயவில் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு வருகைதந்து சடலத்தினை பார்வையிட்டதன் பின்ன பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணிப்புரை விடுத்தார்.