மட்டக்களப்பு மாநகரசபைக்கு யுனிசேப் வதிவிட பிரதிநிதி விஜயம்

யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டிம் சுட்டான் இன்று மாலை மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு மாநகரினை சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கும் செயற்றிட்டத்தினை ஆரம்பிக்கும் நோக்கோடு இந்த விஜயமானது அமைந்திருந்தது.

மட்டக்களப்பு மாநரக முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யுனிசெப் நிறுவனத்தின் சார்பாக  பிரதம வெளிக்கள அலுவலர் றிபென்சியா,மாநகர சபையின் ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி ரோகினி விக்னேஸ்வரன் உள்ளிட்ட மாநரக சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது சிறுவர் நேய மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. பல வளர்முக நாடுகளில் மேற்படி சிறுவர் நேய மாநகரங்கள் அமையப்பெற்றிருந்தாலும், இலங்கையில் முதல்முறையாகவும் ஏனைய மாநகரக சபைகளுக்கு எடுத்துக்காட்டாக மேற்படி  திட்டம் அமையப்பெறவுள்ளதாக யுனிசெப் நிறுவனத்தின் பிரதம வெளிக்கள அலுவலர் றிபென்சியா தெளிவுறுத்தினார்.

அத்துடன் மாநகருக்குள் வாழும் சிறுவர்களின் திறன் விருத்தி சிறுவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் ஊடாக அவர்களை எதிர்காலத்தில் சமுகப் பொறுப்பு மிக்க நற்பிரஜைகளாக வளர்த்தெடுக்க முடியும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.