முடிவுக்கு வந்த மட்டக்களப்பு மாநகரசபையின் போராட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் மேற்கொண்டுவந்த பணி பகிஸ்கரிப்பு இன்று பகலுடன் நிறைவுக்கு வந்தது.

நேற்று முன்தினம் நாவற்குடா பகுதியில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவர்களுக்கான நீதிவேண்டியும் இந்த பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று காலை மாநகரசபை ஊழியர்கள் எந்தவித பணிக்கும் செல்லாமல் வாயில் கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு மாநகரசபையின் அனைத்து உத்தியோகத்தர்களும் ஆதரவ வழங்கிய நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் நேற்று பிற்பகல் பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டபோதிலும் தொடர்ந்தும் பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுவந்ததுடன் நேற்று மட்டக்களப்பு மாநகரசபையின் அனைத்து செயற்பாடுகளும் முடங்கியது.

எனினும் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் வழமைபோன்று நடைபெற்ற அதேவேளையில் இன்று காலையும் மாநகரசபையின் ஊழியர்கள் தொடர்ந்து பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

நேற்று முன்தினம் நாவற்குடா பகுதியில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்கள் அப்பகுதியை சேர்ந்த சிலரால் தாக்கப்பட்ட நிலையில் அவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாக்கியவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தும் வரையில் தமது பணி பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் என மாநகரசபை ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடுகள் உட்பட பல்வேறு புனரமைப்பு பணிகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் அறிவித்துள்ள நிலையில் போராட்டம் கைவிடப்பட்டு ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.