கல்லடி பாலத்திற்கருகில் குழப்பம் -முதல்வரை கொண்டுசெல்ல முற்பட்ட பொலிஸ்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் இன்று எல்லைக்கல் நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்குவந்த சிலர் அதனை தடுக்கு முற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இன்று காலை குறித்த அரச காணி பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இந்த எல்லைக்கல் நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது காத்தான்குடி பொலிஸாரின் வாகனத்தில் வந்த ஒரு குழுவினர் மாநகரசபையின் செயற்பாட்டினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.இதன்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள்,மாநகரசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் வந்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டது.

குறித்த காணி அரச காணியாகவுள்ள நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்யாமல் குறித்த காணிக்கு உரிமை கொண்டாடும் ஒருவர் பொலிஸ் வாகனத்தில் வந்து குறித்த பகுதியில் மாநகரசபையின் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அங்குவந்த பொலிஸார் மாநகர முதல்வரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல முற்பட்டபோது அங்கிருந்த இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கிருந்து பொலிஸார் சென்றுவிட்டனர்.

சட்டபூர்வமற்ற ஆவணங்களுடன் ஒரு குழு நீண்டகாலமாக குறித்த காணியை அபகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் குற்றஞ்சாட்டினார்.

கடந்தஆண்டு குறித்த காணியை அபகரிக்க முயற்சி மேற்கொண்ட நிலையில் அப்பகுதி பொதுமக்களினால் அது தடுக்கப்பட்டது,மீண்டும் கடந்த ஜுலை மாதமும் குறித்த காணியை அடைக்க முற்பட்டபோது அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் விஜிர அபேயவர்த்தனவின் தலையீடு அரச அதிகாரிகள் மீது செலுத்தப்பட்டது. குறித்த காணிமீதான நடவடிக்கையினை அரச அதிபர்,பிரதேச செயலாளர் நிறுத்துமாறு பணிக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.ஆனால் குறித்த காணி அரசாங்க காணி என்பதை எங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களிலும் உள்ளதாகவும் மாநகர முதல்வர் சரவணபவன் தெரிவித்தார்.

வடிகான்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மாநகரசபைக்கு உள்ளது.அந்த அடிப்படையில் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது எந்தவித சட்ட ஆவணங்களும் இல்லாமல் பொலிஸாருடன் வந்து பிரதேச செயலாளர் தமக்கு கடிதம் வழங்கியுள்ளதாக குறித்த நபர் தெரிவித்த போதிலும் எந்த ஆவனத்தினையும் அவர் கொண்டிருக்கவில்லையெனவும் முதல்வர் தெரிவித்தார்.