“மீன்பாடும் தேன்நகரம் - மட்டுநகர் தினம்” பிரகடனம் மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று இடம்பெற்ற 11வது சபை அமர்வின் போது மட்டக்களப்பு மாநகரத்திற்கென ஒரு தினத்தை நியமித்து அதனை “மீன்பாடும் தேன்நகரம் - மட்டுநகர் தினம்” என பிரகடனப்படுத்தப்படுவது தொடர்பில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் சபையின் ஏகோபித்த ஆதரவுடன் அத்தினம் பிரகடனப்படுத்தவதற்கான அனுமதி நிறைவேற்றப்பட்டுள்ளது.


புலம்பெயர் நாட்டில் வசிக்கும் எமது மாவட்டத்தைச் சேர்ந்த நலன்விரும்பியொருவரின் கோரிக்கையின் பிரகாரம் மாநகர சபை கலை கலாசாரக் குழுவின் தலைவர் வே.தவராஜா அவர்களினால் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் கலை கலாசாரக் குழுவின் தலைவர் வே.தவராஜா அவர்கள் தெரிவிக்கையில் மிகப் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கிய மட்டக்களப்பின் விசேட அம்சங்களை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாநகரத்திற்கென ஒரு தினத்தை அமுல்ப்படுத்த வேண்டும். மாவட்டம் மற்றும் மாநகரம் சார்ந்த கலை வல்லுனர்கள், பற்றாளர்கள், புத்திஜீவிகள், உயர் அதிகாரிகள், கல்விமான்கள் உட்பட சான்றோர்களை உள்ளடக்கியதாக ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு மட்டக்களப்பு மாநகரசபை மாநகரசபையாக பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தினை மட்டுநகர் தினமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

இதன் போது எமது மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் அமசங்கள், கலை கலாச்சார பண்பாட்டு விடயங்கள் என்பன உள்ளடங்களாக மேற்படி தினமானது இரண்டு நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என்வும் அவர் தனது வேண்டுகோளில் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது கல்விசார் உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளைப் பெறுவதும் சிறப்பானதாக அமையும் என்பதோடு கலந்துரையாடல்களின் பின்னர் மட்டுநகர் தினமானது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் மாநகர முதல்வர் தெரிவித்தார். இதற்கு சபை ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.