தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலைசெய்யக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலைசெய்யக்கோரி மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்;டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மண்கூண்டு கோபுரத்தில் இருந்து பஸ் நிலையம் வரையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றதுடன் அதனைத்தொடர்ந்து காந்திபூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பிரதேசசபையின் தவிசாளர்கள்,பிரதேசசபை,மாநகரசபை உறுப்பினர்கள்,இளைஞா அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறைக்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்;டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன் சிறைக்கைதிகளை விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும் என்று கோசங்களையும் எழுப்பினர்.

சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலைசெய்ய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைவழங்க கூடிய அதிகாரம் உள்ள காரணத்தினால் அவர் தனது அதிகாரத்தினைக்கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய முன்வரவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

நல்லாட்சி அரசாங்கத்தினை தமிழ் மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புடன் கொண்டுவந்;ததாகவும் அவர்களின் எதிர்பார்ப்புகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லையெனவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.