மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நூலகர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு



(விளாவூர் சுமன்)

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நூலக ஆளனியினருக்கான முழாய பயிற்சிக் கருத்தரங்கானது இன்று (29.10.2018) மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் நூலகக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக்கருத்தரங்கினை மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், உள்ளூராட்சி ஆணையாளர் சி.பிரகாஸ், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்செயன், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் சியாஹுல் ஹக், மாநகர நூலகக் குழுவின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான வே.தவராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர். 

இக் கருத்தரங்கின் விரிவுரைகளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட நூலகரும், இலத்திரனியல் நூலகத் திட்டத்தின் வளவாளருமான எம்.என்.ரவிக்குமார் நடாத்தினார்.

தற்காலத் தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நூலகங்களிடையே நூலக மென்பொருள் பாவனையை நிறுவுவதோடு, அவற்றை இலத்திரணியல் நூலகங்களாக வடிவமைத்து வாசகர்களின் நூலகப் பயன்பாட்டினையும், வாசிப்பு பழக்கத்தினையும் அதிகரிக்கும் நோக்கோடு இந்த பயிறசிக் கருத்தரங்கு அமைந்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் நூலகங்களில் பணியாற்றும் 50 இற்கும் அதிகமான நூலகர்கள் இந்தப் பயிற்சிக் கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தனர்.