சிறுமி மரணம் - யூலியன் உட்பட சந்தேக நபர்கள் மூவருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்



மட்டக்களப்பு மயிலம்பாவெளி தாமரைத் தடாகத்தில் விழுந்து 7 வயது சிறுமியொருவர் பலியான சம்பவம் தொடர்பாக பிரதேச செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மூவரையும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக 1979ம் ஆண்டு 15ஆம் இலக்க இலங்கை தண்டனை சட்டக்கோவை 298ம் பிரிவின் பிரகாரம் வழக்கு தொடரப்பட்டு தாமரை தடாகம் அமைப்பதற்கு உரிமை வழங்கப்பட்ட சவுக்கடி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த செல்வராசா செவ்வந்தி, நடராஜன் அமலினி மற்றும் ஒப்பந்தகாரர் ஞானபிரகாசம் யூலியன் ஜெயப்பிரகாஸ் ஆகியோரை புதன்கிழமை (03) ஏறாவூர்ப் பொலிஸார் கைதுசெய்தனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நீதவான் கறுப்பையா ஜீவராணி முன்னிலையில் ஆஜர் செய்தபோது சந்தேக நபர்களை எதிரவரும் 17ஆந் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்திரவிட்டார்.
(நன்றி சபேஸ்)