குடிநீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக நாளை மாபெரும் எதிர்ப்பு போராட்டம் -ஆதரவு கோரும் பொது அமைப்புகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தண்ணீர் போத்தல் தொழிற்சாலையினை அப்பகுதியில் இருந்து அகற்றுமாறு கோரும் வகையிலான மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம்,செங்கலடி-பதுளை வீதியில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.

நாளை காலை காந்திபூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று மட்டக்களப்பு அரசார்பற்ற ஒன்றியமான இணையத்தின் காரியாலயத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன்,ஏறாவூப்பற்று பிரதேசசபை உறுப்பினர்எஸ்.சிவானந்தன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

குறித்த குடிநீர் போத்தல் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படுமானால் குறித்த பகுதியில் பாரிய வறட்சி நிலையேற்படும் எனவும் விவசாயம் பாதிக்கப்படும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
நாளை காலை 9.00மணியளவில் அனைவரையும் காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.