கோட்டைக்கல்லாறில் மின்னல் தாக்கி காணமல்போன மீனவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கோட்டைக்கல்லாறு பாலத்திற்கு அருகாமையில் உள்ள ஆற்றில்  மீன்பிடித்துக்கொண்டிருந்த மின்னல் தாக்கியதன் காரணமாக ஆற்றில் காணாமல்போன மீனவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.


கோட்டைக்கல்லாறு 2 கிராமத்தைச் சேர்ந்த 40 வயதையுடைய  கந்தசாமி இராஜேந்திரம் எனும் மூன்று பிள்ளைகளின்    தந்தையே  நேற்று (17) மாலை ஆற்றில் மீன் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கிய நிலையில் ஆற்றில் காணாமல்போயிருந்தார்.

இவரை தேடும் பணியில் பிரதேச மீனவர்களும் பொலிஸாரும் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை கோட்டைக்கல்லாறு வாவி பகுதியில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட சடலத்தினை திடீர் மரணவிசாரனை அதிகாரி ச.கணேசதாஸ் பார்வையிட்டதுடன் சடலத்தனை பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

இது தொடர்பானமேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மழை நேரங்களில் மீன்பிடியில் ஈடுபடுவோர் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.