இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய 1008 சங்காபிஷேக பூஜை


(லியோன்)

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட இருதயபுரம் மேற்கில் அமைந்துள்ள சிறப்பு மிக்க ஆலயமாக விளங்கும் ஸ்ரீ பாலமுருகன்  ஆலயத்தின்  கும்பாபிஷேக  தினத்தை முன்னிட்டு 1008  சங்காபிஷேக பூஜை  நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக  நடைபெற்றது .


மட்டக்களப்பு  சின்ன ஊறணி ஸ்ரீ மாவடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான  பண்ணீர் குட பவனியில் அறநெறி பாடசாலை மாணவர்களின்   காவடியாட்டம் சகிதம் பெண்கள்  பண்ணீர் குடங்களை தாங்கியவாறு இந்த  பவனியில் கலந்துகொண்டனர்.

பண்ணீர் குட பவனியானது ஆலயத்தினை சென்றடைந்ததும் அடியார்கள் கொண்டுசென்ற  பண்ணீர் மூலமூர்த்தியாகிய  முருகனுக்கு  அபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மகிழவெட்டுவான் ,ஆயித்தியமலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குரு ஈசான சிவஸ்ரீ பாலசந்திர குருக்கள் தலைமையில் ஆலய பிரதம குரு பகிரத சர்மா குருக்கள் ,சாதக ஆசான் சிவஸ்ரீ  சி .கு .லவகுமார்  சர்மா  குருக்கள் இணைந்து நடத்தப்பட்ட விசேட யாக பூஜை தொடர்ந்து ,பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாக  முருகனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது..

இதனை தொடர்ந்து  விசேட 1008 சங்காபிஷேக  பூஜைகள் மிக சிறப்பாக  நடைபெற்றது இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்