தேசிய மட்டத்தில் படுவான்கரையை பெருமைப்படுத்திய பாடசாலை

மட்டக்களப்பு மகிழவட்டவான் மகா வித்தியாலய மாணவி 2017ஆம் வருடத்துக்கான சமூக விஞ்ஞானப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.கருணாதாசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மகிழவட்டவான் மகா வித்தியாலய மாணவி கே.நிலாகினி 2017ஆம் வருடத்துக்கான சமூக விஞ்ஞானப் போட்டியில் தரம் 8 வகுப்புப் பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினையும்,தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று கொண்டுள்ளார்.

அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூலமாக அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை பெற்றதன் அடிப்படையில் தேசிய மட்டத்தில் சிங்கள மொழி மூலமான மாணவர்களுடனும், ஆங்கில மொழி மூலமான மாணவர்களுடனும் இவரது திறமை கணிக்கப்பட்டு தேசிய ரீதியாக இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு தேசிய ரீதியாக சமூக விஞ்ஞான பாடத்துறை சார்பாக கிடைத்த முதலாவது விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.