அட்டப்பள்ளம் இந்துமயானம் பிரச்சினை –ஆளனரை தலையீடுசெய்யுமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கோரிக்கை

அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பளம் பொதுமயானப் பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுனர் நேரடியாக தலையிட்டு அந்த மக்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அட்டப்பளம் பொது மயானப் பிரச்சினை தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பொதுச்செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்திலேயெ இதனை குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நிந்தவூர் பிரதேசத்தில் அட்டப்பள்ளம் மக்களினால் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தப்பட்டு வந்த பொது மயானம் யுத்த காலம் தொடக்கம் சிறிது, சிறிதாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கடந்த 27.02.2018ம் திகதி முற்று முழுதாக குறித்தநபர் ஒருவரினால் அளந்து எல்லையிட முற்பட்ட வேளையில் மக்களுக்கும் குறித்த நபர், அரச அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு பொலிஸாரின் தலையீட்டினை அடுத்து குறித்த அட்டப்பள்ளத்தினைச் சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டதும் எம்மிடம் அட்டப்பள்ள மக்களினால் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சம்பவம் கிழக்கு மாகாணத்தில் மிகவும் கரிசிணையுடன் சேவையாற்றும் தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்; என நினைக்கின்றேன்.

குறித்த பொதுமயானம் மீதான அத்து மீறல் சம்பவமானது கிழக்கு மாகாணத்தின் ஒரு இனத்தினை இன்னுமொரு இனம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையினை உருவாக்கி இன முரண்பாட்டினை தோற்றுவித்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகின்றது.

எனவே கிழக்கு மாகாணத்தின் இன உறவு மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்குடன் செயற்படும் தாங்கள் நேரடியாக குறித்த விடயத்தில் தலையிட்டு அட்டப்பள்ள மக்கள் கால காலமாக பயன்படுத்திவந்த பொது மயானத்தினை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்து சுமுகமான தீர்வு ஏற்படுவதற்கு ஆவண செய்யுமாறு குறிப்பிட்டள்ளது.