பிள்ளையானின் கட்டவுட்டுக்கு முன்பாக சத்தியப்பிரமாணம் செய்த உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் சத்தியப்பிரமானம் செய்யும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் சத்திப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித பொகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட 36 உறுப்பினர்கள் ஆளுனர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் க.யோகவேள்,கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்,மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் க.சித்திரவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கட்டவுட்டுக்கு முன்பாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.