ஐ.தே.க.வுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரசாரம்

மட்டக்களப்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான பிரசாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளருமான திருமதி சசிகலா விஜயதேவா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளருமான திருமதி சசிகலா விஜயதேவா இன்று மாலை அமிர்தகழி பகுதியில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார்.

இந்த தேர்தல் பரப்புரையின்போது மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பட்டியல் வேட்பாளராக இணைக்கப்பட்டிருந்தவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு தனது ஆதரவினை தெரிவித்தார்.

அத்துடன் அப்பகுதியில் உள்ள சில பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.
இங்கு உரையாற்றிய திருமதி சசிகலா விஜயதேவா,

நான் கடந்த காலத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் பொது அமைப்புகள் ஊடாகவும் பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டுவந்தேன்.

எனது கணவரும் நானும் இணைந்து என்னால் முடிந்தவரையில் சமூகத்திற்கான சேவையினை செய்துள்ளேன்.எமது சமூகம் அபிவிருத்தியடையவேண்டும்.அதற்காக வழியை நாங்கள் ஏற்படுத்தவேண்டும்.

இன்னும் காரணங்களை கூறி எமது ஏமாற்றும் நிலையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றிவருகின்றது.அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான பொய் பிரசாரங்களையும் அவர்கள் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.