பெரியகல்லாறில் இளைஞர் குத்திக்கொலை – தந்தை மகன் பொலிஸில் சரண்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் இன்று செவ்வாய்க்கிழமை (26-12-2017)மாலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை 7.00மணியளவில் பெரியகல்லாறு ஊர்வீதியில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கமே கத்திக்குத்து சம்பவத்திற்கு சென்றதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியை சேர்ந்த ஜேசுதாசன் திமேசன்(23வயது)என்னும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் மைத்துனர் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரும் சந்தேக நபரின் தந்தையும்  சரணடைந்துள்ளதாகவும் சடலம் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிவான்நீதிமன்ற நீதிபதி மற்றும் மரண விசாரண அதிகாரிகளின் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.