முதியவரை தாக்கிவிட்டு பணம் கொள்ளை –சத்துருக்கொண்டானில் மூவர் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை தாக்கி அவரிடம் இருந்து பணத்தினை பறித்துச்சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

\நேற்று திங்கட்கிழமை பிற்பகல் துவிச்சக்கர வண்டியில் 130,000ரூபா பணத்துடன் சென்றவரை சத்துருக்கொண்டான் கண்ணகியம்மன் ஆலயத்திற்கு அருகில் வைத்து பொல்லுகளால் தாக்கிவிட்டு பணத்தினை பறித்துச்சென்றதாக மட்டக்களப்பு பொலிஸாரிடம்  முறையிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சத்துருக்கொண்டான் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மூன்று இளைஞர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.