மட்டக்களப்பில் பாரிய கொள்ளை -மூன்று மணி நேரத்தில் மீட்ட பொலிஸார்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் ஒன்று பதிவுசெய்யப்பட்டு மூன்று மணித்தியாலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் இன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளைச்சம்பவம் ஒன்று தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

கல்லடி பாலத்திற்கு அருகில் புதிய டச்பார் வீதியில் உள்ள நகை உற்பத்தியாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் நடைபெற்றது.

நேற்று புதன்கிழமை மாலை வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு வீட்டின் சாமி அறையில் இருந்த நகை பாதுகாப்பு பெட்டகம் அப்படியே கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதுடன் நகை உற்பத்தி நிலையத்தில் இருந்த அலுமாரியும் உடைக்கப்பட்டது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.

சுமார் 68இலட்சம் ரூபா பெறுமதியுடைய சுமார் 1000 கிராம் நகைகள் ஒரு இலட்சம் ரூபா பணம் பாதுகாப்பு பெட்டியுடன் கொள்ளையிடப்பட்டிருந்தது.
வீட்டினுள் மிளகாய் தூளை தூவிவிட்டு இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றது தொடர்பில் வீட்டில் நகை தொழில் செய்யும் நான்கு இளைஞர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையினை தொடர்ந்து குறித்த நகைப்பெட்டகம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய காட்டுப்பகுதியில் புதைத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல்களைப்பெற்றுக்கொண்ட பொலிஸார் அங்கு சென்று அதனை மீட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட நகைப்பெட்டகம் பொலிஸாரினால் உடைக்கப்பட்டு நகைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டன.

கடந்த மூன்று மாதங்களாக குறித்த வீட்டில் இருந்து திட்டங்களை தீட்டி குறித்த இளைஞர்கள் இந்த கொள்ளை முயற்சினை மேற்கொண்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மூன்று தினங்களாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நான்கு இளைஞர்கள் மட்டுமே இருந்துவந்ததாகவும் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு குறித்த நகைப்பெட்டகள் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டு கல்லடி கடற்கரையில் புதைத்திருந்த நிலையில் மீண்டும் அவற்றினை எடுத்துகொண்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய காட்டுப்பகுதியில் புதைத்துவைத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் நாளை சனிக்கிழமை நீதிவான் முன்பாக ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில விஜயசேகர, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரிஆயராய்ச்சி, களுவாஞ்சிகுடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி ஆகியோர் வருகைதந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களை பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.