தமிழராகிய நாங்கள் பெற முடிந்ததை பெற்றுக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும்.


(திலக்ஸ் ரெட்ணம்)
தமிழராகிய நாங்கள் அரசியலமைப்பு விடயத்தில் பெற முடிந்த உச்சகட்டத்தை பெற்றுக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். சமகால அரசியல் சார்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த காலங்களில் ஆட்சி செய்த நாட்டின் தலைவர்கள் தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்க முயலுகின்ற போது அதனை  மதத்தலைவர்கள் தடுத்து கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.  நாட்டை கூறு போடுகின்ற அரசியலமைப்பு வேண்டாம் பழைய அரசியலைப்பு போதும் என்கின்ற கருத்தை மதத்தலைவர்கள் முன்வைத்து இந்த அரசியலமைப்பினையும் முடக்குவதற்கு அரசியற் பின்ணணியில் செயற்படுகின்றார்கள். இந்த யாப்பினை பற்றி தமிழர் தரப்பும் தவறான பிரச்சாரங்கள் செய்கின்றனர். அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசியற்தீர்வையும் நாம் பெறாவிட்டால் இனிவரும் எந்தவொரு காலத்திலேயும் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியற்தீர்வு கிடைக்க போவதில்லை. ஆகவே நாம் எமக்கு கிடைக்கின்ற வாய்ப்பை நழுவ விடாமல் இதனை பெற்று அதன் உச்சபயன அடைந்து இதற்கூடாக முன்னோக்கி நகர்ந்து மேலும் தேவையானவற்றை பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கலாம். இந்த அரசியல்சாசனம் நிறைவேற தமிழ் மக்கள் ஒன்று திரண்டு தங்கள் ஆதரவினை தெரிவிக்க வேண்டும் எனவும், சம்பந்தர் ஐயா ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற தீபாவளி பண்டிகை நாளில் உரையாற்றியதை பலர் விமர்சனம் செய்கின்றனர். 

ஆனால் முப்பது வருடமாக பெற்றுகொள்ளாமுடியாத தீர்வுக்கான செயற்பாட்டை ஒரு வருட தீபாவளி இடைவெளிக்குள் பெற்றுக்கொள்வது சிரமமான விடயம். ஆகவே படிப்படியாகத்தான் ஒருவிடயத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும்  தெரிவித்தார்.