மல்லிகைதீவில் சிறுமிகள் துஸ்பிரயோகம் -மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாவட்டம் மூதூர் மல்லிகைதீவு பகுதியில் சிறுமியர் மூவர் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகளை கண்டுபிடித்து விரைவாக தண்டனை வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் முற்போக்கு அமைப்பு என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வித்தியா,சேயா என தொடங்கி திருகோணமலை மல்லிகைத்தீவு பச்சிளஞ்சிறுமிகள் வரையில் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு எதிரான கண்டன பேரணியொன்று காந்தி பூங்கா முன்பாக ஆரம்பித்து மட்டக்களப்பு பிரதான பஸ்நிலையம் வரையில் சென்று அங்கிருந்து மீண்டும் காந்திபூங்காவினை பேரணி வந்தடைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன பேரணியில் மௌனத்தை களைப்போம் குற்றவாளிகளை கைதுசெய் என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும்,மௌத்தை களைத்து குற்றவாளிகளை கைதுசெய்,பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பினை உறுதிசெய்,மனித வேட்டைக்கு குழந்தைகள் இரையா போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையம் ஏந்தியிருந்தனர்.

குறித்த சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டது தொடர்பில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது கோரிக்கை விடுத்தார்.