வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றனர் –மட்டு.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் தொடர்ச்சியான ஏமாற்றங்களையே கிழக்கு மாகாணசபை வழங்கிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 87வது நாளாகவும் இன்றும் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உபதலைவர் மன உளைச்சல் மற்றும் மன அளுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் பட்டதரிகள் இவ்வாறு பலர் இன்று மன உளைச்சலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விசேட கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கூட்டம் நடாத்தப்படவில்லையென்பதை சுட்டிக்காட்டும் பட்டதாரிகள் தம்மீதான அசமந்த போக்கே இதற்கு காரணம் எனவும் தெரிவித்தனர்.

இதேநேரம் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இன்றை தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் பதாகையொன்றையும் தமது போராட்ட இடத்திற்கு முன்பாக வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.