60வது நாளை தொட்ட பட்டதாரிகளின் போராட்டம் -விரக்தியில் வாழ்வதாக தெரிவிப்பு

வேலையற்ற பட்டதாரிகள் என்ற அடையாளத்துடன் கடும் கவலைக்கு மத்தியிலும் விரக்தியின் மத்தியிலும் தாங்கள் வாழ்ந்துவருவதாக வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் இரண்டு மாதங்களை கடந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பட்டதாரிகளின் வேலைகோரிய சத்தியாக்கிரக போராட்டம் முழு வீச்சுடன் நடைபெற்றுவருகின்றது.

பல்வேறு இடர்பாடுகளுக்கும் அப்பால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இரவு பகலாக வேலையற்ற பட்டதாரிகளின்போராட்டம் இன்றுடன் 60வது நாளை எட்டியுள்ளது.

தமது போராட்டம் 60வது நாளை எட்டியுள்ளதையிட்டு இன்று காலை காந்தி பூங்கா முன்பாக சர்வமத பிரார்த்தனையினையும் கவன ஈர்ப்பு போராட்டத்தினையும் பட்டதாரிகள் முன்னெடுத்தனர்.

மதத்தலைவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனைகளை நடாத்தியதை தொடர்ந்து வேலையற்ற பட்டதாரிகளின் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கழுத்தில் கயிறுகளை மாட்டி மாகாண மத்திய அரசாங்கங்கள் அதனை இழுப்பது போன்று பட்டதாரிகள் கயிறுகளை மாட்டி மட்டக்களப்பு நகரில் உள்ள மண்கூட்டு கோபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது நியாயமான கோரிக்கையினை வென்றெடுப்பதற்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இங்கு பட்டதாரிகளினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தொழிலுரிமைக்காக தாம் மேற்கொண்டுவரும் போராட்டம் தொடர்பில் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் பாராமுகமாகவே இருந்துவருவதாகவும் பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பட்டதாரிகளில் பலர் குடும்பத்திற்கு தலைமை தாங்கும் நிலையுடன் உள்ளதுடன் பலர் தமது பிள்ளைகளை கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

எங்களது எதிர்காலத்தின் நிலை என்னவென்று தெரியாத நிலையிலேயே வீதிகளில் இறங்கி தாம் போராடிவருவதாகவும் இதனை அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாங்கள் வீதியில் இறங்கி போராடிவரும் நிலையில் வெளிச்சமூகத்தின் மத்தியில் தங்களுக்கு அவமானமே மிஞ்சியுள்ளதாகவும் இதனை எங்கள் வாழ்கையினை வாழ்வதற்கான போராட்டமாக சமூகம் பார்க்கவேண்டும் எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

எங்கள் வாழ்கையில் தற்போதுள்ள நிலைமை கஸ்டங்களையும் விரக்தியையுமே தங்களுக்கு தந்துள்ளதாகவும் எனவே நாங்கள் இந்த நிலைமையில் இருந்துமீளவேண்டுமானால் அரசாங்கம் நிரந்தர தீர்வினை எமது போராட்டத்திற்க வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையினை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கையினை உரிய தரப்பினர் விரைவாக மேற்கொள்ளவேண்டும் என மதத்தலைவர்கள் இங்கு கோரிக்கை விடுத்தனர்.