மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு மீளாய்வுக்கூட்டம் -ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு தொடர்பில் கடுமையான விமர்சனம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருட இறுதிக்கான மீளாய்வுக்கூட்டம் இன்று மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டம் ஆரம்பமானபோது அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் உள்செல்ல அனுமதிக்கப்படவில்லை.இதன்போது ஊடகவியலாளர்கள் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் உள்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் அங்கு ஆரம்ப நிகழ்வினை மட்டும் புகைப்படம் வீடியோ எடுத்துவிட்டு செல்லுமாறு அபிவிருத்திக்குழுவின் தலைவர்களினால் பணிக்கப்பட்டது.எனினும் அதற்கு ஊடகவியலாளர்கள் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் அங்கிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பாராளுமன்ற அமர்வுகூட மக்கள் அறியவேண்டும் என்பதற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுவரும் நிலையில் சாதாரண அபிவிருத்திக்குழு கூட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிப்பதற்கு ஏன் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படக்கூடாது என இங்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பினார்.

இங்கு நடப்பதை ஏன் முடிமறைக்கவேண்டும்,நாங்கள் களவுசெய்யவில்லை.ஊடகவியலாளர்கள் புகைப்படம் மட்டும் எடுப்பதற்காக அல்ல,இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வழமையாக ஊடகத்துறையினர் அனுமதிக்கப்பட்டுவந்த நிலையில் புதிதாக ஊடகத்துறையினை அனுமதிக்கமறுப்பதன் காரணம் என்ன என்பதை வெளிப்படுத்தவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி கூட்டம் ஆரம்பமாகி முடிந்த பின்னர் தேவையான விடயங்களைப்பெற்றுக்கொள்வது,கூட்டம் முடிந்ததன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பினைசெய்வது என தீர்மானித்தோம்.

கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தின்போது மூன்று அதிகாரிகள் தங்களது கையடக்க தொலைபேசியில் இருந்து முகநூலில் ஊடாக நேரடியாக ஒளிபரப்பியுள்ளனர்.அதன்காரணமாகவே ஊடகவியலாளர்கள் ஆரம்பத்தில் எடுத்துவிட்டு முடிந்ததன் பின்னர் வந்து கேள்விகளை கேட்கும்போது பதில்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மாவட்ட அபிவிருத்திக்குழுவில் என்ன நடக்கின்றது என்பது மக்களுக்கு தெரியவேண்டும் என்பதினால் ஊடகங்கள் இங்கு இருக்கவேண்டும் என இங்கு பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை ஊடகவியலாளர்கள் பொறுப்புணர்ச்சியுடன் தகவல்கள் வெளியிடவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இந்த இடத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்ச்சையொன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக தகவல் அறியும் சுதந்திரம் என்பது தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சுதந்திரம் என்பதை நாங்கள் மதிக்கின்றோம்.தகவல்களை மக்கள்மத்தியில் கொண்டுசெல்வதில் நாங்கள் இடையூறாக இருக்கவில்லை,ஆனால் ஊடகவியலாளர்கள் தகவல்களை பொறுப்புணர்ச்சியுடன் வெளியில் கொண்டுசெல்லவேண்டும்.

தகவல்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தாத வகையில் உண்மையான தகவல்களை கொண்டுசெல்லுங்கள்.அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகள் உள்ளதன் காரணமாக நாங்கள் தகவல்களைப்பெற்றுக்கொள்வதை தடுக்கவில்லை,ஆனால் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் இந்த கூட்டங்களுக்கு தடங்கல்கள் இல்லாமல் ஊடக தர்மத்தினை,ஊடக ஓழுக்கத்தினை சரியானமுறையில் கடைப்பிடிக்கும்பட்சத்தில் எந்தவிதமான பிரச்சினைகளும் இருக்காது என்றார்.

அதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி அபிவித்திக்குழு தலைமைகளினால் வழங்கப்பட்டது.

இதேவேளை மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்கள் தங்களது கடமையினை மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட செயற்பாட்டிற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் தமது பணியை சுதந்திரமான முறையில் மேற்கொள்ளமுடியாது என்பதையே இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுவதாகவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.