கல்குடா பட்டியடிச்சேனை பகுதி கடலில் மூழ்கி மகன்மார் பலி அதிர்ச்சியால் பெற்றோர் தற்கொலை

(லியோன்)

மட்டக்களப்பு கல்குடா  பட்டியடிச்சேனை  பகுதியில் கடலில் குளிக்க சென்ற தமது மகன்மார் இருவரும் கடலில் மூழ்கி இறந்த தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சியால் வீட்டில் முன்னாள் உள்ள மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .


மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பட்டியடிச்சேனை கிராமத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை சண்முகம்  வயது 54  அவரது மனைவி சண்முகம் யோக லெச்சுமி  வயது  51  ஆகிய இருவரும் இன்று காலை சடலமாக மீக்கப்பட்டுள்ளதாகவும்  அதேவேளை நேற்று மாலை தனது நண்பர்களுடன் கல்குடா  பட்டியடிச்சேனை  பகுதியில் கடலில் குளிக்க சென்ற  சண்முகம் சதிஸ்குமார் வயது 21 மற்றும் சண்முகம் சுரேஸ்குமார் வயது  18  ஆகிய இருவரும் கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவும் உறவினர்கள்  தெரிவிக்கின்றனர்.

கடலில் மூழ்கிய இருவரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் மற்றும்   கடல் படையினரால்  இன்று காலை சண்முகம் சதிஸ்குமார்  என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன்  சண்முகம் சுரேஸ்குமார்  என்பவரை தேடும் நடவடிக்கையில் கடல் படையினரால் மற்றும்  பொலிசார் ஈடுபட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவிக்கின்றனர் .


உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ,குறித்த சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்