முன்னாள் போராளிகளை சர்வதேசத்தின் உதவியுடன் சோதனைசெய்யவேண்டும் -கிழக்கு மாகாணசபையில் ஜனா தீர்மானம் நிறைவேற்றம்

முன்னாள் போராளிகளை சர்வதேசத்தின் உதவியுடன் பரிசோதனைசெய்யவேண்டும் என்னும் பிரேரணை கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமினால் இன்று முன்மொழியப்பட்ட பிரேரணையே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னா போராளிகளை பரிசோதனை செய்யும் வகையில் வைத்தியர்கள் குழுவொன்றினை அமைப்பதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று கிழக்கு மாகாணசபையில் முன்னாள் போராளிகளை சர்வதேசத்தின் உதவியுடன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.

அவர் இந்த உரையின்போது தெரிவித்ததாவது,

18-05-2009க்கு பின்னர் இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் இலங்கை ஆயுதப்படைகளினால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை சர்வதேசத்தின் உதவியுடன் அவர்களை பரிசோதனைசெய்யவேண்டும்.

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அணிக்கு பொறுப்பாக இருந்த தமிழினி உட்பட நூறுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமானமுறையில் இறப்பதாக அறியமுடிகின்றது.

இலங்கையில் சுமார் 12ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உள்ள சுகவீனத்தினை அவர்களை பரிசோதனைசெய்வதன் மூலம் கண்டறிந்து கடந்த காலத்தில் இறந்த போராளிகளின் உடலை பரிசோதனைசெய்து உண்மைத்தன்மையினை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும்.அல்லாதுபோனால் அரசியல்நோக்கத்திற்காக அதனை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசிக்கொண்டிருக்கும் நிலையே ஏற்படும்.

இலங்கையில் 14 புனர்வாழ்வு முகாம் இருந்துள்ளன.அவற்றிற்கு பொறுப்பாக இராணுவ அதிகாரிகளே இருந்துள்ளனர்.இந்த புனர்வாழ்வு முகாம்கள் சிறைச்சாலைகள்,புனர்வாழ்வு அமைச்சினால் கண்காணிக்க்பட்டு இருந்தாலும் பாதுகாப்பு ஆணையாளர் பாதுகாப்பு அதிகாரிகளினாலுமே நிர்வகிக்கப்பட்டுவந்தது.

முன்னாள் போராளியொருவர் போராட்டத்தில் இருந்தபோது ஐம்பது கிலோ எடையை தூக்கிக்கொண்டு ஓடும் நிலையில் இருந்ததாகவும் புனர்வாழ்வுபெற்றதன் பின்னர் பத்து கிலோவைக்கூட தூக்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் அங்கு தமக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

புனர்வாழ்வு முகாமில் விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் உணவுகளில் இரசாயணம் கலக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும் பேசிக்கொள்ளும் நிலைமையை காணமுடிகின்றது.இந்த உரையாடல் அரசியல் ரீதியாக மாற்றம்பெற்றுவருகின்றது.

இந்த நாட்டின் சுகாதார அமைச்சரே இதனை அரசியல் பிரச்சினையாக மாற்றுவதற்கு முன்னர் அந்த பிரச்சினைக்கு தீர்வினை காணவேண்டும் என கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள அதிகாரிகள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால் சர்வதேச வைத்தியர்களின் உதவியுடன் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளின் உடல்களை சோனைக்குட்படுத்தவேண்டும்.அவர்களுக்கு என்ன நோய் உள்ளது என்பது தொடர்பில் கண்டறியப்பட்டவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்க்பபட்டபோது அதனை மத்திய சுகாதார அமைச்சர் மறுத்துள்ளார்.

அண்மையில் கடந்த காலத்தில் கசப்பான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.அவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறியவேண்டும் என இந்த நாட்டின் பிரதமர் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

வடமாகாணசபையில் வைத்தியகுழுவொன்றினை அமைத்து வைத்திய பரிசோதனைகளை நடாத்துவதற்கு தயாராகிவருகின்றனர்.இந்த நிலையில் வடமாகாணத்திற்கு அமெரிக்க வைத்தியர் குழுவொன்று சென்றபோது அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் கூறியிருந்தனர்.அவர்கள் போராளிகளுக்கு விசம் கொடுக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றார்களா என்பதை நாங்கள் அறியவிரும்புகின்றோம்.

வடமாகாணசபையில் வைத்தியகுழுவொன்றினை அமைத்து வைத்திய பரிசோதனைகளை நடாத்துவதற்கு தயாராகிவரும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகளை சோதனை செய்வதற்கு கிழக்கு மாகாணசுகாதார அமைச்சர் இனவேறுபாடுபார்க்காமல் வைத்தியர் குழுவொன்றினை அமைத்து பரிசோதனைக்குட்படுத்தவேண்டும்.

இந்த நாட்டில் ஒரு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.கடந்த காலத்தில் நடைபெற்ற இவ்வாறான கொரூர செயற்பாடுகளை வெளிக்கொணர்ந்து இந்த அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படாதவகையில் அது தொடர்பான குற்றவாளிகள் தண்டிக்கப்படNவுண்டும்.