மட்டக்களப்பில் முதன்முறையாக மகளிர் பஸ்சேவை ஆரம்பம்

ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா மற்றும் கல்லடி பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு பிரத்தியோக வகுப்பிற்காக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செல்லுகின்ற பெண் மாணவிகளுக்கு பிரத்தியேகமாக (விசேடமாக) ஒரு மகளிர் பேரூந்து சேவை ஒன்றினை நடாத்துவதற்கு கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார சபையுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் மேற்கொண்ட முயற்சி காரணமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு காரியாலயம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதனை தொடர்ந்து நேற்று ஞாயிறுக்கிழமை மாலை ஆரையம்பதி பேரூந்து நிலையத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வரலாற்றுமிக்க நிகழ்வில் கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகாரசபையின் மாவட்ட காரியாலய போக்குவரத்து அதிகாரி ஜனாப் யுஆ. அன்வர், முன்னாள் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் மதீன், முக்கிய பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த மகளிர் பேரூந்து சேவையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக ஆரம்பிப்பட்ட ஓர் சேவையாகும். இச்சேவையானது ஆரம்பகட்டமாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பி.ப 2.30 மணிக்கு ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நகருக்கும் மீண்டும் 6.00 மணிக்கு மட்டக்களப்பு நகரிலிருந்து ஆரையம்பதிக்கும் இவ்விசேட மகளிர் பேரூந்து சேவை நடைபெறும்.

இச்சேவையினூடாக பிரத்தியோக வகுப்புகளுக்கு செல்லும் விசேடமாக பெண் மாணவிகள் அச்சமின்றி பாதுகாப்பாக தமது கல்வி சேவையினை முன்னெடுத்து செல்வார்கள். அத்துடன் அலுவலகங்களில் கடமைபுரிகின்ற பெண்களுக்கும் அதேபோன்று தமது அன்றாட தேவைகளுக்காக பிரயாணம் செய்யும் பெண்கள் அனைவரும் இச்சேவையின் மூலம் பயன்பெறமுடியும்.

மேலும் இச்சேவையானது பயணிகளது பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்குமிடத்து இதனை நாளாந்த சேவையாக காலையிலும் மாலையிலும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.