மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பில் கலை மஞ்சரி நிகழ்வு

மட்டக்களப்பு ஸ்ரீவிக்னேஸ்வரா திருத்தொண்டர் சபையினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கலை மஞ்சரி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை சிறப்பிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஸ்ரீவிக்னேஸ்வரா திருத்தொண்டர் சபையின் உபதலைவர் க.சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வின்போது தேசிய ரீதியான தமிழ் தின போட்டியில் ஒன்பது வருடங்களின் பின்னர் தனி இசைப்போட்டியில் முதலிடத்தினைப்பெற்ற மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி செல்வி சிவநாதன் சிவஸ்ரியாவின் கர்நாடக இசைக்கச்சேரி சிறப்பான முறையில் நடைபெற்றது.

அத்துடன் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவிகளின் பஞ்சபாண்டவர் நாட்டிய நாடகம்,குழு நாடகம் மற்றும் களுதாவளை கலைஞர்களின் கண்ணகி வரலாறு கரகாட்டம் என்பனவும் நடைபெற்றது.

இதன்போது கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.