மட்டக்களப்பில் அரச ஊழியர்களுக்கு உத்தரவாதம் இல்லை –மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்;டத்தில் கடந்த இரண்டு காலத்தில் இரண்டு அரச ஊழியர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர் சிலர் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ள நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

இந்த மாவட்டத்தில் மண்டூரில் அபிவிருத்தி உத்தியோகத்தர் கொல்லப்பட்டு ஒன்றரை வருடங்களை கடந்துவிட்டது.அது தொடர்பிலான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லையென குடும்ப உறவினர்கள் எங்களிடம் கவலை தெரிவித்தனர்.

அதேபோன்று களுவாஞ்சிகுடியில் கிராம சேவையாளர் ஒருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பம் பெரும் கஸ்டத்தில் உள்ளதுடன் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டுள்ளது.அது தொடர்பிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாவட்ட செயலகத்தின் உள்ளக கணக்காளர் அவரது வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.அதற்குரிய தகவல்களை நாங்கள் வழங்கியிருந்தோம்.அது தொடர்பில் இதுவரையில் யாரும் கைதுசெய்யப்படவில்லை.

அதேபோன்று மாநகரசபையின் ஆணையாளரின் வாகனமும் அவரது வீட்டில் வைத்து எரியூட்டப்பட்டது.இதுவரையில் எதுவித நடவடிக்கையும் இல்லை.
அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமையினை சரியாக செய்யும் சூழ்நிலைக்கு எங்களுக்கான உத்தரவாதம் தரப்படுமாக என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பில் பதில் அளித்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராய்ச்சி,

அனைத்து பிரச்சினைகள் தொடர்பான விசாரணைகள் முறையான வகையில் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அது தொடர்பில் சந்தேகம்கொள்ளத்தேவையில்லையெனவும் தெரிவித்தார்.