காத்தான்குடியில் யுவதி பாலியல் துஸ்பிரயோகம் -குடும்பஸ்த்தர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் 17 வயது யுவதியை  பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் குடும்பஸ்தர் ஒருவரை புதன்கிழமை இரவு (27.07.2016) கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண்னை மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிப்பெண்னாக இருந்து வரும் நிலையில் இந்த யுவதி தனது சின்னம்மாவின் (தாயின் சகோதரி) பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இருந்து வந்துள்ளார்.

சுமார் 5 வருட காலமாக சாச்சியின் வீட்டில் பாதிக்கப்பட்ட பெண் வசித்து வந்துள்ள நிலையிலேயே இந்த யுவதி சின்னம்மாவின் கணவரால் (சாச்சா) சுமார் இரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார் என்பது பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள குடும்பஸ்தர் (வயது-34) மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியருவதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.