கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை பகல் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள சௌக்கிய பராமரிப்பு பீட வளாகத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்காக அமைக்கப்படும் விரிவுரை மண்டபம் இதுவரையில் பூர்த்திசெய்யப்படவில்லையெனவும் வைத்தியர்களுக்கான பயிற்சி உபகரணங்கள் பற்றாக்குறை பூர்த்திசெய்யப்படவில்லையெனவும் மாணவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்படவில்லையெனவும் இது தொடர்பில் பல்வேறு தடவைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதிலும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனவும் மாணவர்கள் தெரிவிகின்றனர்.

இன்று பிற்பகல் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியதுடன் மட்டக்களப்பு காந்தி பூங்காவரையில் கவன ஈர்ப்பு பேரணியும் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கவன ஈர்ப்பு பேரணியில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தினை சேர்ந்த 400க்கும்மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டவர்கள் “உபவேந்தரே தூக்கமா?,இனியும் எங்களுக்கு ஏமாற்றம்வேண்டாம்,பரிபாலனமே மாணவர் உரிமையினை திருப்பிக்கொடு,கிழக்கு பல்கலைக்கழகத்தின் மீதும் பார்வையினை திருப்பு,இலவச கல்வியை பாதுகாப்போம் போன்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.