இலங்கை முஸ்லிம்களால் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட குரலின் உத்வேகம் குறைந்துவிட்டது –ஜனா

தமிழர் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களிடமிருந்த உலகளாவிய முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் உத்வேகம் இப்பொழுது பலமிழந்து விட்டது அச்சந்தருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
ஏறாவூர் வாவிக்கரையோர மர்ஹ{ம் செய்னுலாப்தீன் ஞாபகார்த்த ஓய்வுப் பூங்காவில் சுமார் ஆயிரத்து ஐந்நூறு பேர் கலந்து கொண்ட மாபெரும் இப்தார் நிகழ்வு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கோவிந்தன் கருணாகரம்,

றமழானின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை  “குத்ஸ்” தினமாகப் பிரகடனப்படுத்தி பலஸ்தீனத்திலே உள்ள முஸ்லிம்களின் மூன்றாவது முக்கிய பள்ளிவாசலான மஸ்ஜிதுல் அக்ஷாவை மீட்பதற்காக இலங்கை முஸ்லிம்கள் உத்வேகத்துடன் பேராட்டம் நடத்தினார்கள்.

ஆயினும், தமிழர் போராட்டம் முடக்கப்பட்ட பின்பு முஸ்லிம்களிடமிருந்த, உரிமைகளைப் பெறுவதற்கான உணர்வும் பலவீனமடைந்து விட்டது என்பது குறித்து நான் கவலையும் அச்சமும் கொண்டுள்ளேன்.

வடக்கு கிழக்கிலே தமிழர் உரிமைப் போராட்ட உணர்வு மேலோங்கியிருந்த காலத்தில் சிறுபான்மையினாரான முஸ்லிம்களிடமும் உரிமைக்கான குரலை ஓங்கி எழுப்பும் திராணி இருந்தது.

வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற சிறுமான்மையினரான தமிழ் பேசும் தமிழர்களும் முஸ்லிம்களும் இறுக்கமாக ஒன்றிணைந்து அரசியல் ரீதியாகப் போராட வேண்டிய தேவை இப்பொழுது வந்திருக்கின்றது.

அடிமட்டங்களிலே இருக்கும் இனங்களுக்கிடையிலான கசப்புணர்வுகளை நீக்க வேண்டுமானால் அரசியல் தலைவர்கள் முதல் அடிமட்ட மக்கள் வரை சிறுபான்மை என்ற ரீதியில் கை கோர்க்க வேண்டும். அதன் மூலமே எமது உரிமையை நிலைநாட்டி அபிவிருத்தி காண முடியும்.

இனவாதிகள் சிறுபான்மையினரைப் பற்றி கேவலம் கெட்ட நிலையில் பேசுவதற்கு இனியும் தமிழ் முஸ்லிம் மக்கள் இடமளித்துவிடக் கூடாது” என்றார்.