மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்

 (லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு  திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம்  நூற்றுக்கணக்கான  அடியார்கள் புடை சூழ  
19.07.2016 இன்று கோலாகலமாக  நடைபெற்றது .

திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா  கடந்த 10ஆம்  திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

ஆலய மஹோற்சவகாலங்களில் ஆலய பிரதம  குரு சிவஸ்ரீ கிருஷ்ணராஜ சர்மா  தலைமையில் தினமும் தம்ப பூஜை ,வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி, வெளி வீதியுலா நடைபெற்றது .

இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக பூசை  மற்றும் அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று  ஆலய மஹோற்சவத்தின்  தீர்த்தோற்சவம் நூற்றுக்கணக்கான   அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்  கோலாகலமாக  ஆலய முன்றலில் உள்ள தீர்த்தக்கேணியில் நடைபெற்றது .

இன்று நண்பகல்  நடைபெற்ற தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து மாலை 05.00 மணியளவில்  உற்சவகால கிரியைகளுடன் ஆலய மகோற்சவ பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது  .