ஏறாவூரில் இந்திய வியாபாரிகள் இருவர் கைது

சுற்றுலா விசாவில் இலங்கைக்குள் நுழைந்து நீண்டகாலமாக புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய புடவை வியாபாரிகள் இருவர் செவ்வாய்க்கிழமை 17.05.2016 மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கிராமப் புறங்களில் வீடுவீடாகச் சென்று சாறி, சல்வார் மற்றும் இன்னோரன்ன ஆடைகளை விற்பனை செய்து கொண்டிருப்பதாக பொதுமக்களிடமிருந்து தமக்குக் கிடைத்த தகவலையடுத்து இந்தக் கைது இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

தென்னிந்தியா, தமிழ்நாடு, மதுரை அருப்புக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாகப்பன் கந்தவேல் (வயது 46), மற்றும் அதே இடத்தைச் சேர்;ந்த நீலமேகன் மணிகண்டன் (வயது 31) ஆகியோரே இலங்கையில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்து உடுதுணிகள் விற்பனையில் ஈடுபட்டபோது பிடிபட்டவர்களாகும்.

இவர்களிடமிருந்து 37 இந்தியத் தயாரிப்பு சாரிகள், 33 சல்வார்கள் உட்பட ஒன்றரை இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட உடுதுணிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை நீதிமன்றத்தின் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தாம் எடுத்து வருவதாகப் பொலிஸார் கூறினர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸின் நெறிப்படுத்தலின் பேரில் பொலிஸ் சார்ஜன்ற்களான எம். பூபாலராஜா மற்றும் எச்.எம். அப்துல் கபூர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.