மட்டக்களப்பில் முள்ளியவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகள்

படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கும் வரையிலும் தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் வரையில் முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்படுவார்கள் என தமிழ் மக்கள் பேரவையின் உபதலைவர் எஸ்.வசந்தராஜா தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து ஆலய முன்றிலில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு முள்ளியவாய்க்காலில்  கொல்லப்பட்டவர்கள் நினைவு கூரப்பட்டனர்.

அதேபோன்று அமிர்தகழி புனித கப்பலேந்திய மாதா தேவாலயத்தில் ஆலயத்தின் பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகள் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வேண்டுதலும் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் உபதலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.