ஒரு வயது குழந்தையினை கைவிட்டு தற்கொலைசெய்துகொண்ட தாய் - சித்தாண்டியில் சம்பவம்

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்காட்டு கொலனி, சித்தாண்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த சண்முகலிங்கம் லுஜிதா (வயது 20) என்ற ஒரு குழந்தையின் தாய், கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை 06.04.2016 இரவு தனது வீட்டு பூஜை அறையில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒரு வயதைக் கடந்த கைக்குழந்தையை தனது தாயிடம் ஒப்படைத்து விட்டு வந்தே பூஜை அறையில் நைலோன் கயிற்றினால் சுருக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டுச் சென்றவரைத் தேடிப் பார்த்தபோது இருளில் கிடந்த வீட்டுக்குள் மகள் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்ததை அடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு கரடியனாறு பிரதேச வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கே. சுகுமாரின் மேற்பார்வையில் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

குரல் வளை இறுகியதால் சுவாசம் தடைப்பட்டு மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.