படுவான்கரையில் தொடரும் யானை தாக்குதல் -பெண் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்சேனைப்பகுதியில் இன்று பிற்பகல் யானையின் தாக்குதல்கள் காரணமாக பெண்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் இன்று பிற்பகல் பெண்னொருவர் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ந.தில்லைநாயகி(58) என்னும் பெண் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு சென்ற கிழக்கு மாகாணசபையின் பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் படுகாயமடைந்த பெண்ணை பார்வையிட்டு தேவையான உதவிகளை வழங்கிவைத்தனர்.

கடந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் யானையின் தாக்குதல்கள் காரணமாக ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.