காத்தான்குடி அல்-ஹிரா பாடசாலைக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் நிதி ஒதுக்கீடு

நூறு வருடம் பழமையான மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி அல்-ஹிரா பாடசாலையின் அபிவிருத்தி பணிகளுக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஒரு மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

 பாடசாலையின் தேவைகளைக் கண்டறியும் நோக்குடன் அவர் திடீர் விஜயமொன்றை மேற்படி பாடசாலைக்கு மேற்கொண்டிருந்தபோது அங்குள்ள குறைபாடுகள் அதிபராலும் ஆசிரியர்களாலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினராலும் சுட்டிக்காட்டப்பட்டன.

பாடசாலையின் அபிவிருத்தி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், மற்றும் பல தேவைகளை கேட்டறிந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அதற்கான சில உதவிகளை கிழக்கு மாகாண சபை மூலம் பெற்று தருவதாகவும் அரசின் 600 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்திற்குள் அல்-ஹிரா பாடாசாலையினை இணைத்துக் கொள்வதற்கு முழுமையாக முயற்சிப்பதாகவும் கூறினார்.

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் இடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண சபை மூலம் ஒரு மில்லியன் ரூபா நிதி பாடசாலையில் நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் காணப்படும் கட்டிடங்களையும், அலுவலகத்தையும் புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 வருட வரலாற்றை கொண்ட இப் பாடசாலையானது காத்தான்குடியில் கல்விச் சேவையினை திறம்பட வழங்குகின்ற முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகும். மேலும்  மிகவும் குறுகியதொரு நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள இப் பாடசாலையில் சுமார் 700ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.